திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் விற்பனை விரைவில் தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை வாணி அறக்கட்டளை மூலம் ரூ.10,500 கட்டணம் செலுத்தி தரிசிப்பதற்கு பக்தர்கள் அலைமோதுகின்றனர். ஒரு நபர் ரூ.10,000 நன்கொடை வழங்கியும், விஐபி பிரேக் தரிசனத்திற்கு கூடுதலாக ரூ.500 செலுத்தியும் இந்த தரிசனத்தை பெற முடியும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முலம் வரும் நிதியை, எஸ்டி, எஸ்சி, பிசி பிரிவினர் வசிக்கும் பகுதியில் இந்து தர்ம பிரசாரத் துறையின் கீழ், இந்து கோயில்களை கட்ட தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி தற்போது 5 ஆயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு பக்தர்களிடையே பெரும் ஆதரவு இருப்பதால், திருமலையில் 800 ஆன்லைன் டிக்கெட்டுகளும், திருப்பதி விமான நிலையத்தில் தினமும் 200 டிக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன. இதில் 800 டிக்கெட்டுகள் அன்றைய தினம் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வழங்கப்பட்டால், அதேநாள் மாலை 4.30 மணிக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுப்பபடுகின்றனர்.
இதனால் ஒரே நாளில் சுவாமியை தரிசித்து விடலாம் எனும் ஆசையில் பலர் இந்த டிக்கெட்டுகளை பதிவு செய்ய முன் வருகின்றனர். இதனால் இதற்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெறும் 2 நிமிடங்களில் தீர்ந்து விடுகின்றன. மேலும் 3 மாதங்களுக்கு முன்னரே தினமும் 500 டிக்கெட்டுகள் வீதம் ஆன்லைனில் முன்பதிவு வசதியும் உண்டு. இதுவும் உடனுக்கு உடன் தீர்ந்து போய் விடுகிறது.
இதனால், திருப்பதி விமானம் நிலையத்தில் வழங்கப்பட்டு வந்த தினசரி 200 டிக்கெட்டுகளை பிரித்து, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி விமான நிலையங்களில் தலா 50 டிக்கெட்டுகள் தினசரி வழங்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.















