மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஸ்ரேயஸ் ஐயர் பிடித்த அற்புத கேட்ச்

0
23

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பவுண்டரி லைனில் அற்புத ‘ரிலே’ கேட்ச்சை பிடித்து அசத்தினார். அது கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவரையும் மிரட்சி கொள்ள செய்தது.

மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சீசனின் 24-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட்டுகளில் வென்றது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தது. 196 ரன்கள் இலக்கை 16.3 ஓவர்களில் கடந்தது பஞ்சாப் கிங்ஸ். இந்த சீசனில் இதுவரை பஞ்சாப் அணி ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி அடையவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான திட்டமிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் உடனான லீக் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மும்பை பேட் செய்த போது 17.3-வது ஓவரில் அந்த அற்புதத்தை நிகழ்த்தினார் ஸ்ரேயஸ். இறுதி ஓவர்கள் என்பதால் பெரிய ஷாட்களை ஆடும் முனைப்பில் இருந்தது மும்பை. அப்போது 18-வது ஓவரை மார்கோ யான்சன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா. அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை.

அந்த ஓவரின் மூன்றாவது பந்தை வேகம் குறைத்து வீசினார் யான்சன். அதை பெரிய ஷாட் ஆடும் நோக்கில் பவுலரின் தலைக்கு மேல் விளாசினார் ஹர்திக். அப்போது லாங்-ஆன் திசையில் இருந்து இடது பக்கமாக ஓடி பவுண்டரி லைனுக்கு வெளியில் சென்ற பந்தை லாவகமாக பிடித்து, களத்தில் இருந்த தன் அணியின் சேவியர் பார்ட்லெட் வசம் த்ரோ செய்தார். அதை அவர் பிடிக்க, ஹர்திக் ஆட்டமிழந்தார்.

இந்த கேட்ச் இந்த சீசனின் சிறந்த கேட்ச்களில் ஒன்றாக அமைந்துள்ளது. களத்தில் ஸ்ரேயஸின் செயல்பாட்டை பார்த்து மும்பை இந்தியன்ஸ் டக்-அவுட்டில் இருந்த வீரர்கள் சிலர் வியப்படைந்தனர். அதன் பிறகு 20 ரன்களை மட்டுமே கூடுதலாக சேர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டமிழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here