ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 217 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஓவரை வீசிய அறிமுக வேகப்பந்து வீச்சாளரான பிரஃபுல் ஹிங்கே 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்திய முதல் அறிமுக வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார் பிரஃபுல் ஹிங்கே. இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய பிரஃபுல் ஹிங்கே 34 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதனால் 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை கொத்தாக தாரை வார்த்த ராஜஸ்தான் அணியால் வெற்றிக்கான வழியை கண்டறிய முடியாமல் போனது.
மற்றொரு அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஷகிப் ஹூசைன் 4 ஓவர்களை வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது வென்ற பின்னர் பிரஃபுல் ஹிங்கே கூறியதாவது: நான் அறிமுகமாகும் போட்டியிலேயே 4 முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று ஏற்கெனவே எழுதி வைத்திருந்தேன். பவர்பிளே ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது.
எப்போதுமே எண்ணங்கள் நிஜமாகும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். 13-வது வயதில் நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். அப்போது எனக்கு லெதர் பால் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு கிளப்பில் சேர அனுமதிக்குமாறு என் தந்தையிடம் கேட்டேன். ஆனால் நான் மிகவும் சிறிய பையன் என்று அவர் முதலில் மறுத்தார்.
பிறகு அவரே என்னை அங்கு அழைத்துச் சென்றார், அன்று முதல் நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். இந்த விருதை எனது குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வைபவ் சூர்யவன்ஷிக்கு பவுன்ஸர் வீசி அதன் வாயிலாக அவரது விக்கெட்டை வீழ்த்துவேன் என என்னுடைய சக அணி வீரர்களிடம் கூறியிருந்தேன். எப்படியாவது அவரை அவுட் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஒரே எண்ணமாக இருந்தது. இவ்வாறு பிரஃபுல் ஹிங்கே கூறினார்.
யார் இந்த பிரஃபுல் ஹிங்கே?
24 வயதான பிரஃபுல் ஹிங்கே, மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர். இவர் விதர்பா அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் பேட்ஸ்மேனாக இருந்த பிரஃபுல் ஹிங்கே, தனது தந்தையின் அறிவுரைப்படி வேகப்பந்து வீச்சாளராக மாறினார். எம்ஆர்எஃப் வேகப்பந்து அகாடமியில் மெக்ராத், செந்தில்நாதன், வருண் ஆரோன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றுள்ளார். ஹைதராபாத் அணிக்காக ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருந்தார். தனது அறிமுக ஆட்டத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.














