மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் நேற்று 2-வது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற 450-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திராவில் வழங்குவதை போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகம் முன்பாக நேற்றுமுன்தினம் போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர். உதவித் தொகையை உயர்த்தி தரக்கோரி மூன்றரை ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதுவரை எங்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எங்களின் ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மாற்றுத் திறனாளிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகம் முன்பு, மாற்றுத் திறனாளிகள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி, பொருளாளர் சக்ரவர்த்தி, ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் உள்பட 450-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதுபோல, தமிழகத்தில் 35 மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 6,500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.



