‘திராவிட இயக்கத்தின் விதை நாடக மேடைகளில்தான் விதைக்கப்பட்டது’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் ‘நாடகவியல் களஞ்சியம்’ நூல் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூலை வெளியிட, திரைப்பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ம.ராசேந்திரன், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ரீட்டா ஜான், துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்.ஆம்ஸ்ட்ராங், நூலாசிரியர் மு.ராமசுவாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், ப.சிதம்பரம் பேசியதாவது: கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2011-ல் வரைவு நூல் வந்து, பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு இன்றைக்கு ஒரு முழுமையான நூலாக ‘நாடகவியல் களஞ்சியம்’ வெளிவந்துள்ளது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நிதிச் சுமையை அரசின் ஒத்துழைப்போடு குறைத்துள்ளோம்.
இதற்காக ரூ.2.15 கோடி நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும், ரூ.1 கோடியை நன்கொடையாக திரட்டி, நூறு ஆண்டுகள் நிதிச்சுமையின்றி கழகம் செயல்படுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதேபோல், அறிஞர்கள் சந்தித்து விவாதிப்பதற்கான ஒரு தளத்தையும் நாம் உருவாக்க வேண்டும். எல்லோரும் அவ்வப்போது சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய சிந்தனைகள் பிறக்கும். எனக்கு நாடகங்கள் மிகவும் பிடிக்கும். பல சிறந்த நடிகர்களை உருவாக்கியது நாடகம்தான்.
அதுமட்டுமின்றி, தமிழகத்தின் அரசியலில் நாடகத் துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. திராவிட இயக்கத்தின் விதையே நாடக மேடைகளில்தான் விதைக்கப்பட்டது. அண்ணா, கருணாநிதி ஆகியோர் நாடகங்களை அரசியல் மாற்றங்களுக்கு திறம்படப் பயன்படுத்தினர்.
இனி 3 மாதங்களுக்கு ஒரு நூல் என பல்வேறு நூல்களை வெளியிட தமிழ் வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது. எனவே இன்னும் பல பேர் எழுதுவதற்கு ஆர்வத்துடன் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



