கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக பாமக செயற்குழு, பொதுக்குழு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மீது அன்புமணி தரப்பு புகார் அளித்துள்ளது.
பாமக சார்பில் ‘2025-க்கு விடை கொடுப்போம். 2026-ஐ வரவேற்போம்’ என்ற தலைப்பில் புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்நிலையில், பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பாமக செயற்குழு, பொதுக்குழு வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாமகவின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில், கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் பாமக தலைவர் அன்புமணிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.
கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்துக்கு பாமக தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது. எனவே, சேலத்தில் 29-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாமகவின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







