நாட்டில் இலக்கியத்துக்கான உயரிய சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் எழுத்தாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 2025ம் ஆண்டு விருதுகளுக்கான எழுத்தாளர்களின் பட்டியலை தேர்வுக் குழுக்கள் பரிந்துரை செய்தன. அதன் பின்னர் சாகித்ய அகாடமி தேசிய நிர்வாகக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் 24 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதலும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்துக்கு பின்னர் சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட இருந்தது. ஆனால், அகாடமி அதிகாரிகள் திடீரென விருதுகள் அறிவிப்பை தவிர்த்தனர். இதற்கு நிர்வாக குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தில் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக ஒப்புதலும் வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில், விருதுகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது சரியல்ல” என்று அவர்கள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து விருதுகள் அறிவிப்பதற்கான செய்தியாளர்கள் சந்திப்பையும் சாகித்ய அகாடமி நிர்வாகத்தினர் ரத்து செய்தனர். இன்று விருதுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







