ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்றின் முதல் ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, ஃபிடேவின் கீழ் பொது வீரராக பங்கேற்றுள்ள டேனியல் துபோவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 14-வது நகர்வின் போது ராணி முன்னால் இருந்த சிப்பாயை பிரக்ஞானந்தா கவனக்குறைவாக நகர்த்தினார். இந்த நகர்வு டேனியல் துபோவுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடியதாக இருந்தது.
ஆனால் துரதிருஷ்டவசமாக நேரம் நெருக்கடி காரணமாக டேனியல் துபோ இதை கவனிக்கவில்லை. இதனால் பிரக்ஞானந்தா நிம்மதியடைந்தார். இதன் பின்னர் 41-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரியின் பீட்டர் லேகோவுடன் மோதினார். இந்த ஆட்டம் 20-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
பி.ஹரிகிருஷ்ணா, சுவீடனின் நில்ஸ் கிராண்டேலியஸுடன் மோதினார். இந்த ஆட்டம் 32-வது நகர்த்தலின் போதும் வி.கார்த்திக், வியட்நாமின் லெ குவாங்லீயம் மோதிய ஆட்டம் 36-வது நகர்த்தலின் போதும், வி.பிரணவ், உஸ்பெகிஸ் தானின் நோடிர்பெக் யாகுபோவ் மோதிய ஆட்டம் 82-வது நகர்த்தலின் போதும் டிரா ஆனது.














