எஸ்ஐஆர் (SIR) எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை எப்படி கையாள்வது என்று தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு திமுகவினர் தனி பாடமே நடத்தி வருகின்றனர். இதற்காக ஊர்கள் தோறும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகினறன.
அந்த வகையில் கள்ளக்குறிச்சியிலும் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்துடன் இதற்கான சிறப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு உடன்பிறப்புகளுக்கு எப்படி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று ஜாலியாக பாடம் எடுத்தார்.
மேடையேறிய உடனே, கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘என்ன பண்ணியிருக்கே!’ என கேட்டுக் கொண்டே வந்தவர், தொகுதி ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகிக்கும் கள்ளக்குறிச்சி நகர் மன்ற தலைவரைப் பார்த்து, “என்ன சுப்பராயலு, உனக்கு என்ன பொறுப்பு கொடுத்துருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டபடியே, கூட்டத்தில் இருந்த உடன் பிறப்புகளைப் பார்த்து பேசத் தொடங்கினார்.
“கொஞ்ச நாளைக்கு நிலம் அளக்குறது, கல்லு நடுறது, பஞ்சாயத்து பண்றது எல்லாம் விட்ருங்க.. மாமன் கூப்பிட்டாரு, மச்சான் கூப்பிட்டாரு, அவங்க கூப்பிட்டு போய் நிக்கலைன்னா கோவிச்சுக்குவாங்கன்னு சாக்குபோக்கு சொல்றதெல்லாம் மூட்டை கட்டி வையுங்க. ‘மாமன், மச்சானுக்கு மிஞ்சிய உறவுமில்லை, மயிருக்கு மிஞ்சிய கருப்புமில்லை’ன்னு பழமொழி சொல்வாங்க. அது சரிதான்.. ஆனா, அவங்கள அப்புறம் பார்த்துக்குவோம்..
இன்னும் இரண்டு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில கவனம் செலுத்துங்க. ‘வாக்குச்சாவடி நிலை அலுவலர்’ எனும் பிஎல்ஓவுடன் சேர்ந்து பணியாற்றுகின்ற பிஎல்ஏ2 (அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்) இதுல ரொம்ப கவனமா இருக்கணும்.
முதல்ல பட்டியல்ல, நம்ம திமுக வாக்காளர்கள் இருக்கிறாங்களான்னு பாருங்க; அடுத்து நாம கவனத்துல எடுத்துக்க வேண்டிய ஆளுங்க.. நம்ம கட்சியில உறுப்பினரா இருக்க மாட்டாங்க, ஆனா ஒவ்வொரு தேர்தல்லையும் கரெக்டா நமக்கு ஓட்டு போடுவாங்க, இன்னும் சில பேரு நம்ம ஆட்சி மேல ஆயிரம் குறை சொல்லிக்கிட்டு தேர்தல்ன்னு வந்தா நமக்கே ஓட்டு போடுவாங்க.
இவங்கெல்லாம் நமக்கான ஓட்டு. இவங்க ஓட்டு பட்டியல்ல இருப்பதை நாம உறுதிப்படுத்தனும். அதுக்கு அப்புறம் நம்ம தோழமைக் கட்சிக்காரங்க ஓட்டு. இதெல்லாம் பட்டியலில் விடுபட்டு போகாமா கண்ணும் கருத்துமா இருக்கனும்.
இதைத்தாண்டி ஒரு குரூப் இருக்கு, கோணலான சிகையலங்கராத்தோடு உலா வருவாங்க.. “கடந்த முறை உங்களுக்குத் தான் ஓட்டு போட்டேன்; இந்தமுறை மாற்றி போடலாம்ன்னு இருக்கேன்!”ன்னு சொல்வாங்க. இப்படி பேசுறவங்கள கண்டுக்க வேணாம். நம்முடனே இருக்கும் சில பேரு, ‘அவன் என் மச்சான் மகன், மாமன் மகன்.. நான் திருத்தி, நம்ம பக்கம் இழுத்து வர்றேன்’ சொல்வாங்க. இதுக்கெல்லாம் ‘ரிஸ்க்’ எடுக்காதீங்க; அவங்களை திருத்தவே முடியாது.
திமுக என்பது நன்கு விளைந்த நெற்பயிர். இதில் களைகளை சேர்த்து விட வேண்டாம். களை எடுக்கும் தருணம் இது. உன்னிப்பாக கவனிச்சி வேலை பாருங்க. முக்கியமா இந்த களைகளுக்கு பிஎல்ஏ2 (அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்) கிடையாது. இதை நினைவில் வச்சிட்டு வேலையைப் பாருங்க.
ரொம்ப முக்கியமா பிஎல்ஓவை (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) மரியாதையாக நடத்துங்க. அவங்க என்ன கேக்குறாங்களோ அதை வாங்கிக் கொடுங்க. அவங்கள உற்சாகப்படுத்துங்க; உதவி செய்யுங்க, இப்படியெல்லாம் செய்தால்தான் வாக்காளர் பட்டியலில் நமக்கான வாக்காளர்களை தக்க வைக்க முடியும்” என்றார்.














