தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மேலும் 3 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம்.
தெலங்கானாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு முறையும் ஓர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோசித்து வந்தது. பிறகு இது தொடர்பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்கும் என அறிவித்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா அமைச்சராக பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானாவில் கடந்த 2023 சட்டப்பேரவை தேர்தலில் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முகமது அசாருதீன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதே தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட தயாரானார். ஆனால் அவருக்கு காங்கிரஸ் மேலிடம், மேலவை உறுப்பினர் பதவி வழங்க தீர்மானித்தது.














