வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதேசமயம், அதிமுகவும் பாஜகவும் இதை ஆதரிக்கின்றன. நவம்பர் 2-ம் தேதி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக இது குறித்துப் பேசினோம்.
தகுதியான வாக்காளர்களை நீக்கி விட்டு பாஜக அணி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்காகவே எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்கிறதே திமுக..?
இது அப்பட்டமான பொய். 25 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருப்பதும், இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்காத நிலையும் இருக்கிறது. இதை எல்லாம் நீக்கவே எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்படுகிறது.
ஒரே மாதிரியான முகம், ஒரே முகவரி போன்றவற்றையெல்லாம் தானாக கண்டறிந்து நீக்கும் மென்பொருள் மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியதே… அதன் பிறகும் எஸ்ஐஆர் தேவையா?
எப்படிக் கண்டறிந்தாலும், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு நோட்டீஸ் கொடுக்காமல், அவர்களின் பெயர்களை நீக்க முடியாது. 2004-ம் ஆண்டு தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ் குப்தா, அப்போது கையில் இருந்த தொழில்நுட்ப வசதிகளை வைத்துக்கொண்டு ஒரே பெயர், ஒரே தந்தை பெயர் இருப்பவர்களை எல்லாம் கண்டறிய நடவடிக்கை எடுத்தார்.
அப்படி சுமார் 4 லட்சம் பேர் கண்டறியப்பட்டனர். அதன் உண்மைத் தன்மையை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, ‘உங்கள் பெயர் எந்த ஊர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டு அந்த வாக்காளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. உண்மையில், அந்த வாக்காளர் அவர் குறிப்பிடும் இடத்தில் தான் நிரந்தரமாக வசிக்கிறாரா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
அதன் பிறகு தான் இன்னொரு இடத்தில் இருக்கும் அவரது பெயரை நீக்க முடியும். இதை 4 லட்சம் பேருக்குச் செய்வதே சிரமமாக இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விஷயத்தில் ஆதாரைப் பயன்படுத்தவும் அனுமதி இல்லை. அப்படியே அனுமதித்தாலும் அதன் மூலம் டூப்ளிகேட்டை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இதுபோல் இன்னும் சில நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதால் தான் இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும் வாங்குவதையும் தடுக்கவே முடியாதா?
வாங்குவோர் இருக்கும் வரை கொடுப்பவர்கள் கொடுத்துக் கொண்டு தான் இருப்பார்கள். கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குவோரும் வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். இதை ஒன்றும் செய்ய முடியாது. நம் ஊரில் அனைவரையும் பிச்சைக்காரர்களாக மாற்றி விட்டோம்.
இதில் அரசியல்வாதிகளை குற்றம் சொல்வதை விட, மக்களாகிய நம்மை நாமே தான் குற்றம் சொல்லிக் கொள்ள வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில், பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவது தான் மக்களாட்சி என மாற்றி இருக்கிறோம்.
எதிர்க்கட்சிகள் சொல்வதைப் போல் பாஜக நினைத்தால் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வர முடியுமா?
பல மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லை. பாஜக கடந்த 10 ஆண்டுகளாய்த் தானே ஆட்சியில் இருக்கிறது. இமாச்சல பிரதேசத்திலும், தெலங்கானாவிலும் அண்மையில் தானே தேர்தல் நடைபெற்றது. அங்கெல்லாம், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக ஆட்சி அமைத்திருக்கலாமே… அங்கெல்லாம் ஏன் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை?
உண்மையைச் சொல்லுங்கள்… இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீதம் சுதந்திரமாகச் செயல்படுகிறதா?
ஒருவர் தோற்றால் தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வார்கள். வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்பார்கள். வெற்றி பெற்றால் எனது வலிமையில் வெற்றி பெற்றேன் என்பார்கள்.
நீங்கள் பதவியில் இருந்த போது ஆளுங்கட்சியின் நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கிறீர்களா?
அரசியல்வாதிகளால் எந்த நெருக்கடியையும் நான் சந்திக்கவில்லை.
முன்னாள் தேர்தல் ஆணையர் என்ற முறையில், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர் களுக்கும் நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
இவர்களுக்கு அறிவுரை கூறுவதும், செவிடன் காதில் சங்கை ஊதுவதும் ஒன்று. இவர்களுக்கு அறிவுரை சொல்லி ஒன்றும் ஆகப்போவதிலலை. நான் சொல்வதால் அவர்கள் தாங்கள் செய்யும் அக்கிரமங்களை நிறுத்தப் போவதில்லை.














