டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அருகில் நிறுத்தப்பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு உருவானது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு விமான நிறுவனங்களுக்கு ‘சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் பேருந்து சேவை வழங்கி வருகிறது.
இதற்கு சொந்தமான ஒரு பேருந்து நேற்று பிற்பகல் மூன்றாவது முனையத்தில் ஏர் இந்தியா விமானத்துக்கு அருகில் நின்றிருந்தது. இந்நிலையில் அந்தப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு உருவானது.
இதையடுத்து விமான நிலைய தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் பயணிகளோ அல்லது உடைமைகளோ இல்லை. டிரைவர் மட்டுமே இருந்தார்.
அவரும் காயமின்றி தப்பினார். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய பேருந்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என சாட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் தங்களின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என விமான நிலையம் தெரிவித்துள்ளது.














