தமிழக அணிக்கெதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் எலைட் பிரிவு ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் எலைட் பிரிவு ஆட்டங்கள் நேற்று நாடு முழுவதும் தொடங்கின. தமிழ்நாடு, ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸில் ஜார்க்கண்ட் அணி வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்கார்களாக ஷிகர் மோகன், சரண்தீப் சிங் ஆகியோர் களமிறங்கினர். ஷிகர் மோகன் 10, சரண்தீப் சிங் 48, குமார் சுராஜ் 3, விராட் சிங் 28, குமார் குஷக்ரா 11, அனுக்குல் ராய் 12 ரன்கள் எடுத்தனர். ஆனால் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் இஷான் கிஷனும், சாஹில் ராஜும் அபாரமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர். சாஹில் ராஜ் அரை சதம் விளாச, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் சதம் விளாசினார்.
ஆட்ட நேர இறுதியில் ஜார்க்கண்ட் அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 183 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 125 ரன்களும், சாஹில் ராஜ் 105 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 6-வது விக்கெட்டுக்கு இதுவரை இந்த ஜோடி 150 ரன்கள் குவித்துள்ளது. தமிழக அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். டி.டி. சந்திரசேகர் 2 விக்கெட்களையும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.