பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்பில் 4 மல்டி-டிராக்கிங் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை: மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள 18 மாவட்டங்களை உள்ளடக்கி 4 ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்திய ரயில்வேயின் தற்போதைய நெட்வொர்க் கூடுதலாக 894 கி.மீ. அதிகரிக்கும்.
இந்த திட்டங்கள் மகாராஷ்டிராவில் (வர்தா மற்றும் பூசாவல் இடையே 3-வது மற்றும் 4-வது பாதை) 314 கி.மீ. ரயில் பாதையை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் உள்ள கோண்டியா-டோங்கர்கர் இடையே 84 கி.மீ. நீள 4-வது பாதை, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் வதோதரா-ரத்லம் இடையே 256 கி.மீ. நீள 3-வது மற்றும் 4 வது பாதை, மத்திய பிரதேசத்தில் இடார்சி-போபால்-பினா இடையே 84 கீ.மீ. நீள 4-வது பாதை ஆகியவை இந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.
அசாம், குஜராத்துக்கு ரூ.707 கோடி கடந்த ஆண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், குஜராத் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ரூ.707.97 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், மாநிலங்களுக்கு தீயணைப்பு சேவை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கு ரூ.903.67 கோடி நிதி உதவி அளிப்பதற்கும் உயர்மட்டக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்படும் ரூ.707.97 கோடியில் அசாமுக்கு ரூ.313.69 கோடியும், குஜராத்துக்கு ரூ.394.28 கோடியும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர்களின் போது மாநிலங்களுடன் தோளோடு தோள் நின்று தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.