நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம்.
கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். ‘கூலி’ படம் வெளியாகும் முன்பு இமயமலையில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், தற்போது ஒரு வார கால பயணமாக அவர் நேற்று முன்தினம் இமயமலை சென்றார்.
ரிஷிகேஷ் சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்தார். நேற்று காலை அவர் கர்ணபிரயாகைக்கு (Kamaprayag) சென்றார். செல்லும் வழியில் அங்குள்ள பழைய பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ள சாலையோரக் கடையில், தனது நண்பர்களுடன் அவர் காலை உணவைச் சாப்பிட்டார். வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்று கொண்டே அவர் சாப்பிடும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பத்ரிநாத் கோயிலுக்கு இன்று செல்கிறார்.