விரைவில் என்னுடன் 3 எம்எல் ஏக்கள் வருவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். ஓசூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, “உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்காதீர்கள்.
எனது மகள் காந்திமதி இன்று முதல்முறையாக பேசினார். அவர் நன்றாகப் பேசியுள்ளார். தற்போது என்னுடன் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். விரைவில் மீதமுள்ள 3 எம்எல்ஏக்களும் என்னுடன் வருவார்கள்” என்றார்.
முன்னதாக ராமதாஸ் மகள் காந்திமதி பரசுராமன் பேசியதாவது: எனது தந்தை ராமதாஸ் துணிச்சலுக்கும், தியாகத்துக்கும் உதாரணமானவர். முதிர்ந்த வயதிலும், உடல் தளராது, உள்ள உறுதி குறையாது துடிப்போடு செயல்பட்டு வருகிறார்.
அவருக்குத் துணையாக நிற்பது எனது கடமை. அவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும் பாமக மாபெரும் சக்தியாக மாறியுள்ளது. ராமதாஸின் ஒற்றைத் தலைமையை ஏற்று, ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.