மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

0
172

தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமருக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும்வரை, தமிழகத்துக்கு ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது’ என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது ஆழ்ந்த கவலையளிப்பதாக உள்ளது. இது தமிழக மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்டகாலமாக ஆழமாக வேரூன்றியுள்ளது. அதை பின்பற்றுவதில் தமிழகம் எப்போதும் உறுதியாக உள்ளது. அலுவல் மொழிகள் விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ‘அலுவல் மொழிச் சட்டம், 1963’-ஐ செயல்படுத்துவதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நவோதயா வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால்தான், தமிழகத்தில் அவை நிறுவப்படவில்லை. இந்த இருமொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின் காரணமாக, கடந்த அரை நூற்றாண்டில் தமிழகம் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது. எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது.

இதுதவிர, தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள் குறித்து கடந்தாண்டு ஆக.27-ம் தேதியிட்ட எனது கடிதத்தின் மூலம் தமிழக அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்தாண்டு செப்.27-ம் தேதி தனிப்பட்ட முறையில் விரிவான கோரிக்கை மனுவாக தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், “சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி மத்திய அரசால் வழங்கப்படாமல் உள்ளது.

மத்திய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான “சமக்ர சிக் ஷா” திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச்சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் மத்திய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளை பெருமளவில் பாதிக்கும்.

தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததால், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்களை உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையை திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றுக்கான பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதோடு ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25-ம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து தனிப்பட்ட முறையில் தாங்கள் தலையிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here