வாகனங்களில் பொருத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை அதானி டிபன்ஸ் & ஏரோஸ்பேஸ், டிஆர்டிஓ இணைந்து நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதானி டிபன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதானி டிபன்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்பு அராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து வாகனங்களில் பொருத்தக்கூடிய வகையிலான வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.
இதனை டிஆர்டிஓ அமைப்பின் பொது இயக்குநர் (எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் சிஸ்டம்) பி.கே. தாஸ் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து நேற்று அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவுக்கு வான்வழி மூலமாக அச்சுறுத்தல் அதிகரித்து வரும் வேளையில், இந்த நவீன ட்ரோன் தடுப்பு அமைப்பு நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க படியாக இருக்கும்.
இன்றைய நவீன போரில் உளவு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ட்ரோன்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பில் நவீன முறையை புகுத்துவதும் தற்போது கட்டாயமாகிவிட்டது.
இந்த நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நீண்ட தூர பாதுகாப்பு, விரைவு மற்றும் துல்லியத்தை உறுதி செய்கிறது. இதனால், நவீன பாதுகாப்பு படைகளுக்கு இது வலிமையான சொத்தாக மாறியுள்ளது. இவ்வாறு அதானி டிபன்ஸ் தெரிவித்துள்ளது.














