1363 பேருந்து நிறுத்​தங்​களில் இன்று தீவிர தூய்மை பணி: 15 மண்டலங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது

0
359

சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சி சார்பில் இன்று தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள், கட்டிடக் கழிவுகள், சாலையோரங்கள் மற்றும் சாலை மையத் தடுப்புகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள், பூங்காக்களில் தூய்மைப் பணிகள், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மாநகரை தூய்மையாக வைக்கும் வகையில், பயணிகளின் வசதிக்காகவும் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் கடந்த ஆக.21-ம் தேதி முதற்கட்டமாக தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்ட தீவிர தூய்மைப் பணி, 15 மண்டலங்களிலும் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும், இன்று காலை 6 முதல் 8 மணி வரை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தப் பணிகளில் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், இருக்கைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தை சுத்தம் செய்து, பேருந்து நிழற்குடைகள் முழுவதையும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்தல், நிழற்குடைகளில் உள்ள பழுதுகளை அடையாளம் கண்டு, அவற்றின் அளவீடுகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here