கிள்ளியூர், வள்ளவிளை அருகே இடப்பாடு கடற்கரை பகுதியில் தனிப்படை போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர்கள் உட்கார்ந்து இருப்பதை தனிப்படை எஸ்ஐ கண்டு, அருகே சென்று பார்த்தபோது 7 பேர் தலா ஐந்து கிராம் கஞ்சாவை கையில் வைத்துக்கொண்டு புகைத்துக்கொண்டு இருந்ததை கண்டனர். உடனடியாக அவர்களை பிடித்த தனிப்படை போலீசார் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மார்த்தாண்டம்துறை பள்ளி வளாகம் பகுதியை சேர்ந்த ஷாம் (24), சூசைபுரம் காலனி சோனி (20), வள்ளவிளை மெஜோ (19), ஜார்ஜ் நகர் ரிக்கோ (20), செயின்ட் ஜோசப் காலனி சாபின் (24), செயின்ட் காத்தரின் தெரு மெல்ஜித் (19), கால்வின் (19) என்பதும், கேரளப் பகுதியான பொழியூரிலிருந்து பொட்டலமாக கஞ்சா வாங்கி வந்து பயன்படுத்தியதாகவும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதில் கைதான ஷாம் என்பவர் செம்பொன்விளை கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நான்கு பேர் கல்லூரி மாணவர்கள், இரண்டு பேர் மீன்பிடி தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.














