வயநாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது: பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியலுக்கு பரீட்சை!

0
165

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை மிதமாக இருந்தது. வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல் அரசியல் பிரவேசம் என்பதால் இத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

வயநாட்டின் சுல்தான் பத்தேரி, கல்பேட்டா, மானந்தவாடி, மலப்புரம் மாவட்டத்தின் எரநாடு, நீலாம்பூர், வாண்டூர், கோழிக்கோட்டின் திருவம்பாடி என வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு இந்த மூன்று மாவட்டங்களில் 7 சட்டப்பேரவை தொகுதி பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. வயநாட்டு தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி 2வது முறையாக வெற்றி பெற்றார். ஆனால், ரே பரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததால் வயநாட்டில் அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் பிரியங்கா காந்தி. இங்கு அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொக்கேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மூவரைத் தவிர பிறர் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றனர்.

வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல் அரசியல் பிரவேசம் என்பதால் இத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நவ்யா, சத்யன் இருவருமே பிரியங்கா காந்திக்கு தேர்தல் அரசியல் புதிது என்பதால் அவரால் தொகுதிக்கு சிறப்பாகப் பணியாற்ற முடியாது என்ற புள்ளியிலேயே பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். பாஜகவின் நவ்யா ஹரிதான் கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலராக இருமுறை இருந்தவர் என்பதால் அவர் நிச்சயமாக பிரியங்காவுக்கு சவாலாக இருப்பார் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த மும்முனைப் பேட்டி காங்கிரஸுக்கும், பிரியங்காவுக்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது. வயநாட்டில் பிரியங்கா பிரச்சாரத்தில் பெண்கள் அதிகளவி கலந்து கொண்ட போக்கே இருந்தது. இது வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இருப்பினும் வயநாடு இதுவரை காங்கிரஸ் கோட்டையாக அறியப்படுவதால் பிரியங்காவின் வெற்றி முன் தீர்மானிக்கப்பட்டதே என்று சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here