காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட போலி வங்கி கணக்குகளை பாதுகாப்பு முகமைகள் கண்டறிந்து முடக்கியுள்ளன. இந்த வங்கி கணக்குகள் மூலம் திரட்டப்படும் நிதி, பிரிவினைவாத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் சைபர் குற்றங்களின் நிதி ஆதாரமாக இத்தகைய கணக்குகள் விளங்குகின்றன. திருடப்பட்ட பணத்தை, யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் ‘கிரிப்டோ கரன்சி’களாக மாற்றுவதற்கு இக்கணக்குகளே முக்கியப் பாலமாகச் செயல்படுகின்றன. இவை முடக்கப்பட்டால் ஒட்டுமொத்த சைபர் குற்றச் சங்கிலியும் உடைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2017-ல் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் மீது என்ஐஏ கடும் நடவடிக்கை எடுத்தது. அதன் பிறகு, தேச விரோத சக்திகள் தற்போது டிஜிட்டல் ஹவாலா முறைக்கு மாறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.













