65 ஆண்டுகள் பழமையான எம்.பி. தகுதி நீக்க சட்டத்தை ரத்து செய்து, அதற்கு பதிலாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்டமியற்றும் துறையால் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
16-வது மக்களவையின்போது கல்ராஜ் மிஸ்ரா தலைமையிலான லாப அலுவலகங்களுக்கான கூட்டுக் குழுவின் (ஜேசிஓபி) பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைவு நாடாளுமன்றம் (தகுதி நீக்கம் தடுப்பு) மசோதா 2024 தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம், தற்போதைய நாடாளுமன்ற (தகுதி நீக்கம் தடுப்பு) சட்டம் 1959-ன் பிரிவு 3-ஐ ஒழுங்குபடுத்துவதையும், தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் அட்டவணையி்ல் உள்ள பதவிகளின் எதிர்மறை பட்டியலை அகற்றுவதையும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் இந்த முன்மொழிவு தற்போதைய சட்டம் மற்றும் தகுதியின்மையிலிருந்து விலக்குகளை வெளிப்படையாக வழங்கும் பிற சட்டங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை களைய முற்படுகிறது.