இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து முலான்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் பின்னர் தரம்சாலாவில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 4-வது ஆட்டம் லக்னோவில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சு துறையும் சிறப்பாக செயல்பட்டு இருந்தது.
அதேவேளையில் பேட்டிங்கில் மீண்டும் பார்முக்கு திரும்புவதற்கான கிடைத்த வாய்ப்பை கேப்டன் சூர்யகுமார் யாதவும், துணை கேப்டன் ஷுப்மன் கில்லும் பயன்படுத்திக்கொள்ளத் தவறினர். அந்த ஆட்டத்தில் இந்திய அணி 118 ரன்கள் இலக்கையே துரத்தியது.
எந்தவித அழுத்தமும் இல்லாத நிலையிலும் ஷுப்மன் கில் 28 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்து வழக்கமான தனது ஷாட்டை விளையாடி விக்கெட்டை தாரைவார்த்தார். இவர்கள் இருவரிடம் இருந்து கடந்த ஓராண்டாகவே சிறந்த செயல் திறன் வெளிப்படவில்லை. அதிலும் இந்த சீசனில் சூர்யகுமார் யாதவ் 2 ஆட்டத்தில் மட்டுமே 20 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடித்துள்ளார்.
டி 20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருப்பதால் சூர்யகுமார் யாதவும், ஷுப்மன் கில்லும் விரைவில் பார்முக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். கடந்த ஆட்டத்தில் சொந்த காரணங்களுக்காக அவசரமாக வீடு திரும்பி இருந்த ஜஸ்பிரீத் பும்ரா குறித்து எந்த தகவலையும் பிசிசிஐ வெளியிடவில்லை. இதனால் அவர், இன்றைய ஆட்டத்திலும் களமிறங்குவது சந்தேகம்தான்.
அதேவேளையில் உடல்நலமின்மை காரணமாக அக்சர் படேல் விலகிய நிலையில் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் குல்தீப் யாதவ் இருப்பதால் ஷாபாஷ் அகமதுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது அரிதுதான்.
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி தொடரில் 1-2 என பின்தங்கி உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் முனைப்புடன் செயல்படக்கூடும்.
அணியில் உள்ள பிரதான வீரர்கள் சுழற்சி முறையில் களமிறக்கப்படுவதால் தொடர்ச்சியாக நிலையான செயல் திறனை வெளிப்படுத்த முடியாமல் தென் ஆப்பிரிக்கா நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த டி 20 உலகக் கோப்பை இறுதிப் பேட்டிக்கு பின்னர் தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்ற 28 டி 20 ஆட்டங்களில் 18-ல் தோல்வியை சந்தித்து உள்ளது. நிலையான அணிச் சேர்க்கையை தேடிக்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம், தொடர்ந்து மாற்றங்களைச் செய்து வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இன்றைய ஆட்டம் உட்பட தென் ஆப்பிரிக்க அணிக்கு 5 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது. இதனால் இந்த 5 ஆட்டங்களும் அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. ஏனெனில் இந்த போட்டிகளில் இருந்தே டி 20 உலகக் கோப்பைக்கான சிறந்த வீரர்களை தென் ஆப்பிரிக்க அணி தேர்வு செய்யும்.







