மகா கும்பமேளாவுக்கு 3,000 சிறப்பு ரயில்கள்: சென்னை, கன்னியாகுமரியில் இருந்தும் புறப்படுகின்றன

0
185

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ஜனவரியில் தொடங்கும் மகா கும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

உ.பி.யின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 2025 ஜனவரியில் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.

இதையொட்டி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மகா கும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது வசதிக்காக வழக்கமான 10,100 ரயில்களுடன் 2,917 சிறப்பு ரயில்களை ரயில்வே துறை இயக்க உள்ளது.

மொத்தம் 13,017 ரயில்கள் பிரயாக்ராஜுக்கு வந்து செல்லவிருக்கின்றன. உ.பி. முதல்வர் யோகிக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கடிதத்தில் இத்தகவலை கூறியுள்ளார்.

மகா கும்பமேளா சிறப்பு ரயில்கள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்தும் புறப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் மகா கும்பமேளாவின் மவுனி அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் இயங்க உள்ளன.

இதற்கிடையில் மகா கும்பமேளா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13-ம் தேதி பிரயாக்ராஜ் வருகிறார். அப்போது சில முக்கிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக பிரயாக்ராஜ் அருகிலுள்ள ஷிருங்வேர்பூர் மடத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். இந்த மடமானது, ராமாயணத்தில் ராமரை படகில் அழைத்துச் சென்ற நிஷாத்ராஜ் எனும் குகன் பெயரில் செயல்படுகிறது. இங்கு குகனுடன் இணைந்த ராமரின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார். ஷிருங்வேர்பூரில் இருந்து பிரதமர் மோடி, கங்கை நதி வழியாக க்ரூஸர் வகை சிறிய கப்பலில் பிரயாக்ராஜுக்கு பயணிக்கிறார். பிரயாக்ராஜின் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்துகொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here