“தமிழகத்தில் வரும் கோடை காலங்களில் மின் விநியோகத்தை சமாளிப்பதற்காக மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்” என மத்திய அரசிடம், மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லியில் மத்திய அரசின் எரிசக்தித் துறை செயலர் பங்கஜ் அகர்வால் மற்றும் நிலக்கரி துறை செயலர் விக்ரம் தேவ் தத் ஆகியோருடன் இணை கூட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், “தமிழகத்தில் வரும் கோடை காலங்களில் மின் விநியோகத்தை சமாளிப்பதற்காக மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்.
மேலும், குறுகிய காலத்துக்கு மின் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பின்னர், தமிழக மின்வாரியத் திட்டங்களுக்கு நிதி வழங்கி வரும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், ஊரக மின்மயமாக்கல் கழக நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் அலுவலர்களை சந்தித்து, திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியினை விரைந்து வழங்குமாறு வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், உத்திர பிரதேச மாநில எரிசக்தித் துறை கூடுதல் தலைமை செயலர் நரேந்திர பூஷன் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.