ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கிரசியன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்து, படகில் இருந்த நாகராஜ் (47), பிரபு (49), ரூபன் (45) ஆகியோரைக் கைது செய்து, காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர்களை இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, ஜன.13-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஒரு வாரத்தில் 18 ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

