ரயில் பயணிகளிடம் காணாமல் போன ரூ.62.91 லட்சம் மதிப்புள்ள 205 செல்போன்களை, ரயில்வே பாதுகாப்பு படை ஒப்படைத்துள்ளது. மத்திய தொலை தொடர்பு துறையில், ரயில்வே பாதுகாப்பு படைக்கு (ஆர்பிஎஃப்) சில அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில்களில் காணாமல் போகும் பயணிகளின் செல்போன்களை உடனுக்குடன் மீட்டு, ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளிடம் திருடு அல்லது காணாமல் போன செல்போன்கள் குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை உரிய புகார்களை பெறும்.
இதையடுத்து, சென்ட்ரல் எக்யுப்மென்ட் ஐடென்டிட்டி ரிஜிஸ்டர் என்ற சிஇஐஆர் செயலியில், ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, காணாமல் போன செல்போன்களை மீட்டு பயணிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
சென்னையில் திருடுபோன செல்போன்கள் புதுடெல்லி, ராஜஸ்தான் மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், சமீபத்தில் மீட்கப்பட்ட 8 செல்போன்களை சம்பந்தப்பட்ட பயணிகளிடம், தெற்கு ரயில்வே ஆர்பிஎஃப் ஐஜி அருள்ஜோதி சென்னையில் நேற்று வழங்கினார். அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரையில், ரூ.62.91 லட்சம் மதிப்புள்ள 205 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.














