டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் சுமார் 6.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். வரும் 2026-ம் ஆண்டில் 2 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று டிசிஎஸ் அண்மையில் தெரிவித்தது. இதன்படி சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்படும். அவர்களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி 8 மாதங்களுக்கு மேல் பணி ஒதுக்கப்படாமல் இருக்கும் ஊழியர்களுக்கு சிறிய அளவிலான இழப்பீடு மட்டுமே கிடைக்கும். 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான ஊதியம் கிடைக்கும். அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 24 மாதங்களுக்கான ஊதியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள், புதிய வேலைவாய்ப்புகளை தேடுவதற்கு தேவையான உதவிகளை டிசிஎஸ் வழங்கும். மேலும் ஓய்வு பெறும் வயதில் இருப்பவர்கள், விருப்ப ஓய்வு திட்டத்தில் நிறுவனத்தில் இருந்து வெளியேற ஏற்பாடு செய்யப்படும் என்று டிசிஎஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.