தாம்பரம் மாநகராட்சியில் பட்டாசு குப்பை அகற்றும் பணியில் 1,650 பேர்: நேரத்தை மீறி வெடித்ததாக 67 வழக்குகள் பதிவு

0
225

தாம்பரம் மாநகராட்சியில் தீபாவளியையொட்டி மட்டும் 29 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டதாக தாம்பரம் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசுகள் வெடித்தும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளி தினத்தில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சென்னையில் பல இடங்களில் யாரும் இதனை கடைப்பிடிக்கவில்லை.

வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பை தாம்பரம் முழுவதும் ஆங்காங்கே தேங்கியது. இப்படி டன் கணக்கில் பல்வேறு இடங்களிலும் கிடக்கும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை முதலே அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தாம்பரம் மாநகராட்சி, 5 மண்டலங்கள், 70 வார்டுகளை கொண்டுள்ளன. இங்கு சுமார் 1,680 தெருக்கள் உள்ளன. 5 மண்டலங்களிலும் குப்பை சேகரிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும், 400 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து, நேற்று காலை முதல் 70 வார்டுகளிலும் குப்பை அகற்றப்பட்டது.

பட்டாசு குப்பை அதிகமாக இருக்கும் என்பதால் இப்பணியில் 1,650 தூய்மை பணியாளர்கள், 385 லோடு ஆட்டோக்கள், 55 டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஐந்து மண்டலங்களிலும், வழக்கமாக அகற்றப்படும் 400 டன் குப்பை இல்லாமல், பட்டாசு குப்பை 29 டன் அகற்றப்பட்டது. இப்பணியில் 1,680 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனிடையே தாம்பரத்தில் சில இடங்களில் மழை பெய்த நிலையில் மழை நீரோடு சேர்ந்து பட்டாசு குப்பைகளும் தேங்கி இருப்பதால் பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் தூய்மை பணியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. பட்டாசு குப்பைகளை சாலைகளில் ஒட்டிக் கொள்வதால் சுரண்டி எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. பட்டாசு குப்பைகளோடு சேர்ந்து கம்பி மத்தாப்புகள் உள்ளிட்ட கம்பிகளும் குப்பைகளோடு கிடந்ததால் அவற்றை அகற்றும்போது தூய்மை பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.

குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் தாம்பரம் மாநகராட்சி 2-வது மண்டல குழுத் தலைவர் இ. ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நியூ காலனி பகுதி தெருக்களில் உள்ள பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன. பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது.

தாம்பரம் காவல் ஆணையரகத்தில், தாம்பரம், பள்ளிக்கரணை என இரண்டு காவல் மாவட்டங்கள் உள்ளன. இந்த காவல் மாவட்டங்களில், தீபாவளி தினத்தில் நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தாம்பரத்தில் 34, பள்ளிக்கரணையில் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் சுமார் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here