இந்திய கிரிக்கெட் வீராங்கனை கோங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கிப் பாராட்டினார்.
மலேசியாவில் சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டி-20 இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டி சென்றது. முக்கியமான இப்போட்டியில் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, 3 விக்கெட்களை சாய்த்த தெலங்கானாவை சேர்ந்த கோங்கடி திரிஷாவுக்கு ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தற்போது நாடு திரும்பியுள்ள கோங்கடி திரிஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நேற்று அவர் ஹைதராபாத்தில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது தெலங்கானா அரசு சார்பில் கோங்கடி திரிஷாவுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஊக்க பரிசாக ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.














