தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.15-ம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 1 லட்சத்து 28,499 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தவெக அரசின், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22-ம் தேதி முதல், பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், தாயையும் கவுரவிக்கும் விதமாக தங்கம் மோதிரம் வழங்கப்பட உள்ளது.
இதில் ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41,667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 14-ல் தமிழக மருத்துவப்பணிகள் கழகத்தால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
11 நிறுவனங்கள் தமிழ்நாடு டெண்டர்ஸ் போர்ட்டல் மூலமாக பங்கேற்று தங்களின் விலைப்புள்ளி விவரத்தை தெரிவித்தனர். இதில் குறைந்த விலைப்புள்ளியை வழங்கிய ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இத்திட்டமானது அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து 4 மாதங்களுக்கு தேவையான ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு 70:30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமானது, தமிழக அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில்பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
