Home தேசிய செய்திகள் ‘சத்தியத்தின் வெற்றி’ – ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

‘சத்தியத்தின் வெற்றி’ – ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

0

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக பெற்றுள்ள வெற்றி, “பொய்யின் எதிரொலிக்கு எதிரான சத்தியத்தின் வெற்றி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அபாரமான வெற்றியை வழங்கி வரலாற்றுத் தீர்ப்பளித்த அம்மாநில மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த வெற்றியானது பொய்யின் எதிரொலிக்கு எதிராக சத்தியத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றிக்கான சான்றாகும். மக்களின் இந்தத் தீர்ப்பு, டபுள் என்ஜின் அரசின் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளுக்கு தங்களின் முழுமையான ஆதரவு உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக நிரூபித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு, ராஜஸ்தான் மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வதுடன், ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையிலும் வளத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருதற்கான நமது உறுதியை மேலும் பலப்படுத்தும்.

இந்த நன்னாளில், தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் மற்றும் அரும்பாடுபட்ட கட்சியின் அர்ப்பணிப்புமிக்க தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, “இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது, இது பாஜக அரசின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மறுபடியும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக மாநில அரசு ஆற்றிய பணிகளுக்கு மக்கள் தங்களின் ஒப்புதலை அளித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் ஜெய்ப்பூர், உதய்பூர், கோட்டா மற்றும் பில்வாரா ஆகிய 4 மாநகராட்சிகளில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் டோடாஸ்ரா, பாஜகவின் இந்த வெற்றி அரசின் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்துகிறது என்றும், வாக்கு சதவீத அடிப்படையில் பாஜகவை விட காங்கிரஸ் மிகக் குறைந்த அளவிலான வித்தியாசத்திலேயே பின் தங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், வார்டுகள் சீரமைப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முறைகேடாக நடத்தப்படாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் கூடுதல் 1,500 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கும் என்றும், பட்டியலினத்தவருக்கான வார்டுகளில் காங்கிரஸ் 542 இடங்களையும், பாஜக 350 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் களத்தில் அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, காங்கிரஸ் முன்னிலையில் இருந்த சில வார்டுகளில் முடிவுகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version