வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
திண்டுக்கல்லில் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னச்சாமி செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த ஜூலை 27 முதல் வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. இதனால் எல்லையோர மாவட்டங்களில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து வங்கிகளில் கடன் பெற்றுதொழில் செய்துவரும் நிலையில், இந்தத் திடீர் தடையால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும், உரிமையாளர்கள் கடனை அடைக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டத்துக்கு உட்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல அரசு மீண்டும் அனுமதிக்க வேண்டும்.
40 முதல் 50 ஆண்டுகளாக முறையான அனுமதி பெற்று இயங்கி வந்த பல குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 11 குவாரிகள், கோவையில் 6 குவாரிகள், திருப்பூர் மாவட்டத்தில் 17 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசு இதை விரைந்து ஆய்வு செய்து,
தவறுகள் ஏதேனும் இருப்பின் நிபந்தனைகளுடன் மீண்டும் குவாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும்.
கனிமங்களுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்துள்ளது. அரசு நிர்ணயித்த விலையான எம்.சாண்ட் ரூ.5000, ஜல்லி ரூ.4000, பி.சாண்ட் ரூ.6000 என்ற விலையைவிட சந்தையில் உள்ள போட்டி காரணமாக குவாரி உரிமையாளர்கள் குறைவான விலையிலேயே பொருட்களை விற்பனை செய்கின்றனர். விலையை உயர்த்தி விற்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.
முன்பெல்லாம் குவாரி உரிமம் புதுப்பிக்க 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் நிலை இருந்தது. ஆனால் தற்போதுள்ள ஆட்சியின் நடவடிக்கைகளால் விரைவாக சுற்றுச்சூழல் அனுமதிஉள்ளிட்டவை கிடைக்கின்றன. இது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
