காலி மது பாட்டில்களை திரும்ப பெற, இயந்திரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடை முறைப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீலகிரியிலும், பின்னர், பல்வேறு மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்தியது. இதற்கிடையே, சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் இந்த திட்டத்துக்கு டாஸ்மாக் கடை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடை பணியாளர்களை கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தாமல், மாற்று வழிகளில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், காலி மதுபாட்டில்களை பெற இயந்திரத்தை பயன்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய இயந்திரம் பொது இடங்களில் வைக்கப்பட்டது.
அதில், காலி பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால், அதற்கு பணம் அல்லது மஞ்சப்பை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. அந்த இயந்திரம் போலவே மது பாட்டில்களை திரும்ப பெற, இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போது, அந்த இயந்திரத்தை சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, டாஸ்மாக்கில் மது வாங்கும் போது கூடுதலாக ரூ.10 பெற்று அதில் ஒரு க்யூஆர் குறியீடு கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
அந்த ஸ்டிக்கரை இயந்திரத்தில் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஸ்கேன் செய்யும் போது பாட்டிலை செலுத்த வாயில் திறக்கப்படும். அதில் பாட்டிலை கொடுக்கும் போது இயந்திரம் ரூ.10-ஐ வழங்கும்.
இந்த இயந்திரம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
