நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த 21 பேர் நேற்று சென்னை வந்தடைந்தனர். முன்னதாக டெல்லியில் அவர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் ஏரி உடைப்பால் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஆக.26-ம் தேதி திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் சிக்கியுள்ள இந்தியர்களை அந்நாட்டு அதிகாரிகள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர். இதையடுத்து முதல்வர் விஜய், மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும் டெல்லியில் முகாமிட்டு பணிகளைக் கண்காணிக்கவும் சிறப்பு அமைச்சர்கள் குழுவை நியமித்தார்.
அதன்படி டெல்லியில் முகாமிட்டுள்ள ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு, மீட்புப் பணிகளைத் தொடர்ந்து முடுக்கிவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா ஏஜென்சி மூலம் நேபாள கைலாஷ் யாத்திரை சென்ற 57 பேரில் 21 பேர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் ராணுவ உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் விமானம் மூலம் காத்மாண்டு வழியாக நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமான நிலையத்தில் வரவேற்றார். அவருடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் உடனிருந்தார்.
அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் விமான நிலையத்துக்கு சென்று மீட்கப்பட்ட தமிழர்களை வரவேற்று, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.
அவர்களிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு தேவையான உடனடி மருத்துவ உதவிகள், உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்ததுடன், தமிழகத்துக்கு புறப்பட தேவையான விமானம் மற்றும் ரயில் பயண சீட்டுகளை வழங்கவும் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, அவர்கள் விமானம் மூலம் நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தனர். இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீட்கப்பட்ட 21 தமிழர்களின் உடல் நிலை சீராக உள்ளது.
மீதமுள்ளவர்களை எப்படியாவது தொடர்பு கொள்ள முடியுமா என்று கடுமையாக போராடி கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி 400 பேர் தமிழகத்தில் இருந்து சென்றிருக்கலாம்.
நேபாளத்தில் நிலவும் பேரிடர் சூழலில் சிக்கியுள்ள ஒவ்வொரு தமிழரையும் பாதுகாப்பாகத் தமிழகத்துக்கு அழைத்து வரும் வரை இந்த மீட்பு நடவடிக்கைகள் ஓயாது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
