சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.
வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. ஆக.14-ல் வெளியாக இருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி, வெங்கி அட்லூரி, ஜிவி பிரகாஷ் குமார், சூர்யா, மமிதா பைஜு, சுனில் ரெட்டி, தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் என பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சூர்யா பேசும்போது, ‘‘செல்போனுக்கு நாம் கொடுக்கும் கவனத்தை குடும்பத்துக்குக் கொடுப்பதில்லை. இதில் நானும் இருக்கிறேன். செல்போன் பயன்பாட்டை நானும் குறைக்க வேண்டும். செல்போனில் வரும் மெமரிஸ் விடுங்கள். யதார்த்தமான நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். சிறு வயதில் கண்ணாமூச்சி என பல விளையாட்டுகளை விளையாடியிருக்கிறேன். இதெல்லாம் சென்னையில் கிடைக்காது. மறக்க முடியாத அனுபவங்கள்.
‘கருப்பு’ படத்தை வெற்றிப் படமாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் 100-வது நாள் அன்று உங்களைச் சந்திக்கிறேன். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்துக்காகத் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் மமிதா.
எனக்கு இந்தப் படம் புதிய அடையாளத்தைக் கொடுக்கும். அதைக் கொடுத்தவர், இயக்குநர் வெங்கி அட்லூரி. இந்தப் படத்தில் 3 பெண்களின் கதாபாத்திரங்களைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படம் உறவுகள் குறித்து அழகாகப் பேசும். படம் முழுவதும் உங்கள் உதடுகள் அருகே சின்ன சிரிப்பு இருக்கும்.
இந்தப் படம் குடும்பம், ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த படமாக இருக்கும். இது ரசிகர்களுக்கான படம். ரசிகர்களின் குடும்பங்களுக்கான திரைப்படம். 28 வருடத்துக்கு மேல் என்னை இங்கு நிற்க வைத்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு நன்றி. நம்பிக்கை இருந்தால், வாழ்வில் நீங்கள் என்ன ஆசைப்படுகிறீர்களோ அது உங்களுக்குக் கிடைக்கும். தினம் தினம் காதலியுங்கள். பெண்களுக்கு மரியாதை கொடுங்கள். வாழ்வில் எல்லாமே மாறும்.
ஆனால், அவர்கள் மீது இருக்கும் காதல் மாறவே கூடாது. திருமணத்துக்குப் பின் பெண்கள் அனைத்தையும் சமரசம் செய்கிறார்கள். அவர்களுக்குக் காதலைவிட மரியாதையை அதிகம் கொடுங்கள்” என்றார்.
