இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா நேற்று தனது 21-வது பிறந்த நாளை கொண்டாடினார். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் தொடரில் அவர், சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இந்நிலையில் சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஃபிடே தனது எக்ஸ் வலைதள பதிவில், “தனது 12-வது வயதிலேயே கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றி, அந்த காலகட்டத்தில் உலக வரலாற்றிலேயே இப்பட்டத்தைப் பெற்ற இரண்டாவது மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஆர்.பிரக்ஞானந்தா படைத்தார்.
அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையின் உச்சபட்சமாக 2,785 ரேட்டிங் புள்ளிகளையும், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தையும் எட்டினார்.
மேலும், 2024 மற்றும் 2026 ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடர்களில் போட்டியிட்ட அவர், 2023 ஃபிடே உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கத்தையும், 2024-ம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
நமது பெருமைக்குரிய பிரக்ஞானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த ஆண்டும் எண்ணற்ற வெற்றிகளும் வரலாற்றுச் சாதனைகளும் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளது.
