ஆந்திராவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. கடந்த 2020 முதல் 2021 தொடக்கம் வரை இந்தியாவில் முதல் கரோனா அலை ஏற்பட்டது. கடந்த 2021ம் ஆண்டில் இரண்டாம் கரோனா அலையும், கடந்த 2022ம் ஆண்டு தொடக்கத்தில் மூன்றாம் கரோனா அலையும் ஏற்பட்டன.
மூன்று கரோனா அலைகளின்போது இந்தியாவில் 4.50 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 5.33 லட்சம் பேர் உயிரிழந்தனர். கடந்த 2022 ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது.
இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் திடீரென கரோனா வைரஸ் பரவி வருகிறது. கடப்பா மாவட்டத்தின் ராஜம்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது நபருக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. மேல் சிகிச்சைக்காக அவர் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் அவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடப்பாவை சேர்ந்த 43 வயது நபர் அண்மையில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையின் கரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
இந்தச் சூழலில் கடப்பா மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 25 வயது மருத்துவ மாணவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரையும் சேர்த்து கடப்பா பகுதியில் இதுவரை 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
அவர்களோடு தொடர்பில் இருந்த 40 பேரின் சளி மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இதில் 18 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ளோரின் ஆய்வக பரிசோதனை அறிக்கை விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கடப்பா மாவட்ட பொறுப்பு அமைச்சர் சவிதா, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ரவி பாபு ஆகியோரிடம் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். கடப்பா மட்டுமன்றி ஆந்திரா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், வென்டிலேடர்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
