அருணாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால் மாநிலத்தின் 26 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 19 நீர்மின் நிலையங்கள், 150 சாலைகள், 19 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
இதுபோல நாகாலாந்தில் மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மோன், திமாபூர், மோகாக்சங் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு என்எச் 29 தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்தை சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அருணாச்சல பிரதேசம், நாகாலாந்தை சேர்ந்த எம்.பி.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினேன். குறிப்பாக இரு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
வெள்ள நிவாரண பணிகளில் இரு மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும். அனைவரின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
