மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13வது லீக் ஆட்டம் மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ், ரன் குவிக்க திணறியது. துவக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி ஒரு ரன்னிலும், தேவிகா வைத்யா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். கிரண் 22 ரன்கள் சேர்த்தார். அதன்பின் கிரேஸ் ஹாரிஸ், தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், தீப்தி சர்மா 22 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 19.3 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எலிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சோபனா ஆஷா, ஷோபி டிவைன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.