திருவட்டார் அருகே உள்ள குமரன்குடி விளை, மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் பினோ. இவரது தாயார் ராஜாபாய் (வயது 67). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தாராம். சம்பவத்தன்று ஸ்டாலின் பினோ மனைவியுடன் வெளியே சென்றார். இதனால் ராஜாபாய் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.மாலையில் ஸ்டாலின் பினோ வீடு திரும்பிய போது, ராஜாபாய் அறையில் இல்லை. வீட்டில் தேடிய போது அவர் சமையல் அறையில் தூக்குப் போட்டு பிணமாக தொங்குவது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் பினோ திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து உடலை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரித்த போது வீட்டின் அறையில் ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார், வீட்டில் உள்ள சி.சி.வி.டி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ராஜாபாய் தற்கொலைக்கான காரணம் என்ன? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.