இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியா உதவிகளை செய்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவிடமிருந்து இலங்கை 100 கோடி டாலர்கள் புதிய தற்காலிக கடன் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இலங்கை இந்த கடனுதவியை கோர உள்ளதாக அரசு பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடனுதவி பெறுவதற்காக இலங்கையின் நிதியமைச்சக அதிகாரிகள், இந்திய நிதியமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்: டிஸ்னி நிறுவனத்தில் 7 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் இந்த கடனுதவி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் என மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்தார். இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி கேட்டிருந்தது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது. அதில் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. 2027-ம் ஆண்டு வரை இந்த கடன் பல தவணைகளாக வழங்கப்படும்.