Tuesday, October 3, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்வைகாசி விசாக 2-ம் திருவிழாவையொட்டி கிளி வாகனத்தில் எழுந்தருளி பகவதி அம்மன் வீதி உலா

வைகாசி விசாக 2-ம் திருவிழாவையொட்டி கிளி வாகனத்தில் எழுந்தருளி பகவதி அம்மன் வீதி உலா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 2-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும், அதைத்தொடர்ந்து வயலின் இன்னிசை கச்சேரியும், பரதநாட்டியமும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு,தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிதுநேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது.

அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து “திருக்கணம்”சாத்தி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 3-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழு சார்பில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்கா ரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும், 9 மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments