எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை உணவு பாதுகாப்பு கமிஷனர் லால் வினா தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள குடிநீர் ஆலையில் ஆய்வு செய்தபோது உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அபராதம் விதித்து சுகாதாரமற்று விற்பனைக்கு வைத்து இருந்த 200 குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பஜனை கோயில் தெரு, கத்திவாக்கம், நேதாஜி நகர், சத்தியமூர்த்தி நகர், அஜாக்ஸ், தேரடி பகுதிகளில் குடிநீர் கேன் விற்பனை செய்யும் 15 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.