சாமிதோப்பில் அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியின் வடக்கு வாசலில் ஆறு வருடங்கள் பக்தர்களுக்காக தவ மிருந்தார். இந்த தவம் நிறைவு பெற்றபிறகு அந்த தவத்தின் பலனை பற்றி அறிவதற்காக முட்டப்பதி பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால் கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவரை அனுப்பி சாமிதோப்பில் இருந்து அய்யா வைகுண்ட சுவாமியை முட்டப்பதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார். முட்டப்பதியிலிருந்து சாமிதோப்பு வந்த கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவருடனும் மற்றும் தனது பக்தர்களுடன் அய்யா வைகுண்டசுவாமி பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஊர்வலமாக முட்டப்பதி நோக்கி சென்றார். அங்கு பக்தர்கள் கடற்கரையில் காத்திருக்க வைகுண்டசாமி திருப்பாற் கடலுக்குள் சென்று திருமாலுடன் ஆலோசனை பெற்று பின்னர் அன்று மாலையே சாமி தோப்புக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் முத்து குடை ஊர்வலம் இன்று காலை 6 மணிக்கு தலைமை பதியிலிருந்து தொடங்கியது. முத்துக்குடை ஊர்வ லத்தை முன்னிட்டு சாமி தோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடு தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், வாகன பவனியும், காலை 6 மணிக்கு தலைமைப்பதியில் முன்பிருந்து முத்து குடைகளும், மேளதாளங்களும் முன்செல்ல முத்துக் குடை ஊர்வலம் புறப்பட் டது.
இந்த ஊர்வலத்தை தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி துவக்கி வைத்தார். குரு நேம்ரிஷ் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தார்.குருமார்கள் பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், டாக்டர் வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர், வெள்ளை யந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வ ரம், வழியாக முட்டபதி சென்றடைந்தது. ஊர்வலம் போகும் பகுதி களிலுள்ள அய்யா வைகுண்ட சாமி நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெற்றது. நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்றடைந்து முட்டப்பதி பால் கடலில் பதமிட்டு அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணி விடையும், உச்சி படிப்பும் தொடர்ந்து அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. ஊர்வலம் மீண்டும் இன்று மாலை 4- மணிக்கு முட்டப்பதிலிருந்து புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொத்தையடி, கரும்பாட்டூர் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைகிறது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.