பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி மோதலில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடந்த 18-ந்தேதி இம்ரான்கான், பரிசு பொருள் மோசடி வழக்கு தொடர்பாக இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஆஜரானார். இந்த நிலையில் கோர்ட்டு வளாகத்தில் தான் கொலை செய்யப்படலாம் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள கோர்ட்டில் நான் ஆஜரானபோது அந்த வளாகத்தில் அடையாளம் தெரியாத சுமார் 20 பேர் இருந்தனர். புலனாய்வு அமைப்புகளை சேர்ந்த அவர்கள் என்னை கொலை செய்ய வந்துள்ளனர். என்னை சிறையில் அடைக்க அவர்கள் விரும்ப வில்லை. என்னை கொல்லை முயற்சிக்கிறார்கள். அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? எனவே எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கோர்ட்டு விசாரணைக்கு காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்குமாறு தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.