குமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் இன்று நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பெருகிவரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
மேலும் நாட்டின் மேம் பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்வுக்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துவது முதன்மையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கு ஏற்ற வயது, முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் தேவையான இடைவெளி, தாய்மார்களின் உடல் நலத்தை பாதுகாத்தல், ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது, இளம் வயது திருமணம் மற்றும் கர்ப்பத்தை தடுப்பது, மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பது, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை அதிகரிப்பது, வறுமையை ஒழிப்பது உள்ளிட்டவை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மையப் பொருளாகும். அதோடு, குடும்ப நல திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற செய்ய நம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கலைமாமணி பழனியாபிள்ளை குழுவி னரின் சிலம்பாட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இதைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விளம்பர பதாகைகள் வெளியிடப்பட்டன. மஞ்சப்பை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. மேலும் உலக மக்கள் தொகை உறுதி மொழியை கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது டதி பள்ளி சந்திப்பு வழியாக பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சென்று முடிவடைந்தது. பின்னர் அங்கு கருத்தரங்கு நடந்தது. பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நடந்து சென்றனர். பேரணியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரின்ஸ் பயஸ், மருத்துவ பணிகளின் இணை இயக்குனர் பிரகலாதன், துணை இயக்குனர்கள் ராம்குமார், சுபேர் ஹாசன், கிரிஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்