முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (11-ந் தேதி) கோவை வருகிறார். சென்னையில் இருந்து காலை 10 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு கோவை வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார்கள். தி.மு.க.வில் இணையும் நபர்களுக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்கிறார். இந்த விழாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்குகிறார். முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழா முடிந்ததும் ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு வரும் மு.க.ஸ்டாலின் அங்கு ஓய்வெடுக்கிறார்.
மாலை 5 மணிக்கு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் கருமத்தம்பட்டி நால்ரோடு அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது. தமிழக அரசு சார்பில் விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து இந்த விழா நடக்கிறது. விழா முடிந்ததும் மு.க.ஸ்டாலின் இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார். மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் இடங்களில் நேற்று போலீசார் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தினர்.