ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜோஸ் பட்லர் 18, கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன், தேவ்தத் படிக்கல் 2 ரன், ஹோல்டர் 11 ரன், ஹெட்மயர் 8 ரன், துருவ் ஜுரல் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.
முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தபோதிலும், பதற்றம் இல்லாமல் முன்னேறிய ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 124 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின் அஷ்வினுடன் டிரன்ட் போல்ட் இணைய, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அஷ்வின் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அர்ஷித் கான் 3 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஜோப்ரா ஆர்ச்சர், ரிலே மியர்டித் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.